×

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து பெங்களூரு இளம்பெண் பலி

*கணவன்,குழந்தை உயிர் தப்பினர்

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் பெங்களூரு இளம்பெண் பரிதாபமாக பலியானார். மேலும், அவரது கணவன் மற்றும் 4 வயது குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரை சேர்ந்தவர் தனுஜ்(35). பெங்களூருவில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி நேஹா(36). இவர்களது மகன் தகஷ்(4). நேற்று முன்தினம் தனுஜ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்னை சென்று விட்டு, இரவு பெங்களூரு திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை தனுஜ் ஓட்டி வந்தார். தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பைனப்பள்ளி கூட்ரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த முள்வேலி மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது.

கார் இடிபாடுகளில் சிக்கிய நேஹா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். அவரது கணவன் தனுஜ் மற்றும் குழந்தை தகஷ் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து பெங்களூரு இளம்பெண் பலி appeared first on Dinakaran.

Tags : National Highway ,Nadrampalli ,Bengaluru ,Karnataka ,
× RELATED கம்பம் புறவழிச் சாலைகளில் பழுதான...