×

பாடலாசிரியர் சினேகன் புகாரைத் தொடர்ந்து பாஜ பிரமுகரான நடிகை ஜெயலட்சுமி கைது: வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகார் தொடர்பாக, பாஜ பிரமுகரும், நடிகையுமான ஜெயலட்சுமி வீட்டில் போலீசார் 8 மணி நேரம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர். சினிமா பாடலாசிரியர் சினேகன், கடந்த 2015ல் சினேகம் பவுண்டேஷனை பதிவு செய்தார். இதையடுத்து 2018ல் பாஜ பிரமுகர் ஜெயலட்சுமியும் சினேகம் பவுண்டேஷன் என்று பதிவு செய்தார். இதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதால் மாறிமாறி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து வந்தனர். இதுபற்றி இருவரும் திருமங்கலம் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, இருவரிடமும் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பாஜ பிரமுகர் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ஜெயலட்சுமி 2022ல் சினேகம் பவுண்டேஷன் தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து, பாடலாசிரியர் சினேகனும் அங்கு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக திருமங்கலம் போலீசார், நடிகை ஜெயலட்சுமி வீட்டில் சோதனை நடத்த கடந்த வாரம் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து நேற்று காலை திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் சிபுக்குமார் மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்று சுமார் 8 மணி நேரம் சோதனை நடத்தினர்.

அப்போது, பாடலாசிரியர் சினேகன் பதிவு செய்த சினேகம் பவுண்டேஷனை ஜெயலட்சுமியும் பதிவு செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவரை காவல் நிலையம் வரும்படி போலீசார் கூறியுள்ளனர். அதற்கு அவர், நான் ஏன் காவல் நிலையம் வர வேண்டும், என் வீட்டில் சோதனை செய்ததில் என்ன ஆவணங்களை பறிமுதல் செய்தீர்கள் என்று கேட்டும், போலீஸ் வாகனத்தில் என்னால் வர முடியாது என்றும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் அவரது காரிலேயே போலீசார் பாதுகாப்புடன் திருமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 420 பிரிவில் வழக்கு பதிந்து ஜெயலட்சுமியை கைது செய்தனர். அவர் மார்ச் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘நீதிமன்ற உத்தரவின்படி ஜெயலட்சுமி வீட்டை சோதனை செய்ததில் பாடலாசிரியர் சினேகன் பதிவு செய்த பவுண்டேஷனை ஜெயலட்சுமியும் பதிவு செய்தது தெரிய வந்ததால் அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர். பாஜ பிரமுகரும், நடிகையுமான ஜெயலட்சுமி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பாடலாசிரியர் சினேகன் புகாரைத் தொடர்ந்து பாஜ பிரமுகரான நடிகை ஜெயலட்சுமி கைது: வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Jayalaxmi ,Snegan ,Chennai ,BJP ,Jayalakshmi ,Sinekan ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...