×

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைதான இயக்குநரின் ஜாமீன் ரத்து

சென்னை: ஆரூத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவன இயக்குநர்களில் ஒருவரான பாஜ நிர்வாகி ஹரீஷ், இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, ரூசோ உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ரூசோவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜாமீன் வழங்கி நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, அனைவரையும் சரி கட்டி விடுவதாக கூறி ரூசோ மோசடி செய்துள்ளார்.

அவர் ஜாமீனில் இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார். பாதிக்கப்பட்ட மேலும் பலர் புகாரளிப்பதை தடுக்க வாய்ப்புள்ளதால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். ரூசோ தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் ஜாமீனை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த நீதிபதி, மூன்று நாட்களில் விசாரணை நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டுமென்றும் சரணடையவில்லை என்றால் கைது செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

The post ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைதான இயக்குநரின் ஜாமீன் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madras High Court ,Rousseau ,Arudra Gold Trading Pvt Ltd ,Dinakaran ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...