×

ஆர்டர் செய்த உணவு வர தாமதமானதால் தாபாவை அடித்து நொறுக்கிய 5 போதை போலீசார்: சமூக ஊடகங்களில் வீடியோ வைரல்

ஆக்ரா: ஆர்டர் செய்த உணவு வர தாமதமானதால் தாபாவை அடித்து நொறுக்கிய 5 போதை போலீசார் மீது உத்தரபிரதேச காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா – மும்பை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தாபாவிற்கு குடிபோதையில் இருந்த 5 போலீசார் சாப்பிட சென்றனர். அவர்கள் ஆர்டர் செய்த ‘ரைதா’ என்ற உணவு பொருள் சப்ளை தாமதமானதால் 5 போலீசாரும் ஆத்திரமடைந்தனர்.

குடிபோதையில் இருந்த அவர்கள், சப்ளையரையும், தாபா ஓனரையும் தாக்கினர். அவர்களை பாதுகாக்க வந்த பேருந்து ஓட்டுநர் உட்பட சில வாடிக்கையாளர்களையும் வெறித்தனமாக தாக்கினர். தாபாவில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர். பின்னர் 5 போலீசாரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் யாவும், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தாபாவின் உரிமையாளர், அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இதுகுறித்து போலீஸ் டிசிபி சோனம் குமார் கூறுகையில், ‘வைரலான வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமன் குமார், நீது சிங் ஆகியோர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.

The post ஆர்டர் செய்த உணவு வர தாமதமானதால் தாபாவை அடித்து நொறுக்கிய 5 போதை போலீசார்: சமூக ஊடகங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Agra ,Uttar Pradesh Police ,Agra-Mumbai highway ,Uttar Pradesh ,
× RELATED மகாராஷ்டிராவில் பேருந்தும், லாரியும்...