×

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல திட்டம்!!

ராமநாதபுரம்: ராமேஸ்வர மீனவர்கள் இருவருக்கு இலங்கை நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் மூன்றாவது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4ம் தேதி 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்களில் 20 பேர் ஐந்து ஆண்டு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

எஞ்சிய 3 பேரில் இருவருக்கு 6 மாதம், ஒருவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோல் இரண்டு மாதங்களுக்கு முன்பும் ஒரு மீனவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு ராமேஸ்வர மீனவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதனை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் இருவருக்கு இலங்கை நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் மூன்றாவது நாளாக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசுக்கும், ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஆர்.டி.ஓ. தலைமையில் மீனவ சங்கங்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சரியான முடிவு எட்டப்படாத நிலையில் இன்று ராமேஸ்வர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் பேரணியாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பேரணி 2நாட்கள் நடைபெறும். மாவட்ட ஆட்சியரிடம் தங்களது அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக மீனவ சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், மீனவர்களின் பாதுகாப்பு கருதி பேரணிக்கு 1000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல திட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Rameswara ,Sri Lankan government ,Ramanathapuram ,Rameswaram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...