×

சென்னை தீவுத்திடலை சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: சென்னை தீவுத்திடலைச் சுற்றி ஜனவரி மாதம் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், கார் ரேசுக்கு தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கார் பந்தயம் நடத்த அரசு 40 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு என்றும் சட்ட அனுமதியின்றி இந்த பந்தயம் நடத்தப்படுவதாகவும் வாதிட்டனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, கார் பந்தயம் நடத்துவது அரசின் கொள்கை முடிவு. இதை நீதிமன்றம் ஆராய முடியாது. இந்த பந்தயத்திற்காக அரசு குறைவாகவே செலவிடுகிறது என்றார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததையடுத்து வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடையில்லை. அதே நேரத்தில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ராஜிவ் காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதியில் ரேஸ் கார்களால் அதிக சத்தம் ஏற்படாமல் பார்க்க வேண்டும். அரசு அளித்த 42 கோடி ரூபாயை பந்தயம் நடத்தும் நிறுவனம் அரசுக்கு திருப்பி அளிக்க வேண்டும். பந்தயத்திற்கான முழு செலவையும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டனர்.

The post சென்னை தீவுத்திடலை சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : High Court ,Formula 4 ,Chennai Island ,CHENNAI ,Tamil Nadu government ,Chennai archipelago ,Madras High Court ,Formula ,4 ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...