×

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்த நடிகரும், பாஜ பிரமுகருமான எஸ்.வி.சேகர் அதை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 2019ம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து, நீதிபதி ஜி.ஜெயவேல், புகார் குறித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய தண்டனை சட்டம் 504 (அமைதியை சீர் குலைத்தல்), 509 (தெரிந்த குற்றம் என கருதி மிரட்டல் விடுத்தல்) மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார் இதனையடுத்து அபராத தொகையை செலுத்திவிட்டு, தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : SV Shekhar ,Chennai Special Court ,Chennai ,BJP ,
× RELATED எல்.எஸ்.டி எனும் ஸ்டாம்ப் வடிவிலான...