×

ஒரு நகராட்சியில் ஒரே பணியை செய்ய இருவேறு துறை அதிகாரிகள் நியமனம் கூடாது: துப்புரவு அலுவலர் சங்கம் கோரிக்கை

பூந்தமல்லி: ஒரு நகராட்சியில் ஒரே பணியை செய்ய இருவேறு துறை அதிகாரிகள் நியமனம் கூடாது என்று நகராட்சி துப்புரவு அலுவலர் ஆய்வாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கத்தின் சார்பில், அதன் மாநில தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையிலிருந்து மருத்துவர்களை, சிறப்பு நிலை நகராட்சிகளில் நகர்நல அலுவலர் பணியிடங்களில் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு நகராட்சி, மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கம் தனது அதிருப்தியை பதிவு செய்கிறது.ஏற்கனவே, பொது சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளை கண்காணித்திட துப்புரவு அலுவலர்கள் இருக்கும் வேளையில், தற்போது அப்பணிகள் நகர்நல அலுவலரின் பொறுப்பில் சென்று விடும். ஒரே பணி பொறுப்புகளை செய்ய 2 துறை சார்ந்த அலுவலர்கள் ஒரே நகராட்சியில் எதற்கு என்று மாநில சங்கம் வினா எழுப்புகிறது.

இதனால் துப்புரவு அலுவலர்களின் பணி, பொறுப்புகள் எவை என்ற குழப்பம் ஏற்படுகிறது. பழனி போன்ற நகராட்சிகளில் நகர்நல அலுவலர் என்ற பணியிடமே இல்லாத போதும், அங்கு பொது சுகாதாரத் துறையினை சார்ந்த மருத்துவர் பணிபுரிந்து வருகிறார். எனவே, வேறொரு துறையின் மருத்துவர்களை நகராட்சி பொது சுகாதாரப் பிரிவினை கவனிக்க அனுமதி அளிப்பதை தவிர்த்திட வேண்டும் என்று மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.

அதேபோல பொது சுகாரத்துறை இயக்குநர், தனது 13.02.2024 தேதி சுற்றறிக்கையில், நகராட்சி, மாநகராட்சிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள், நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஏற்கனவே நகராட்சி, மாநகராட்சிகளில் அப்பணியினை செய்திட துப்புரவு அலுவலர், துப்புரவு ஆய்வாளர் இருக்கும்போது, ஹெல்த் இன்ஸ்பெக்டர்களின் இந்த குறுக்கீடு பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளில் குறுக்கிடுவதாகவும் அமைகிறது. இதுகுறித்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரிடமும், நகராட்சி நிர்வாக உயர் அலுவலர்களிடமும் புகார் தெரிவிக்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஒரு நகராட்சியில் ஒரே பணியை செய்ய இருவேறு துறை அதிகாரிகள் நியமனம் கூடாது: துப்புரவு அலுவலர் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sanitation Officers Association ,Poontamalli ,Municipal Sanitation Officer Inspectors Association ,Tamil Nadu Municipality ,Municipal Sanitation Inspector ,Dinakaran ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்