×

பேசுவதற்கு செல்போன் கேட்டு தர மறுத்த மொபைல் ஷோரும் ஊழியருக்கு கத்தியால் சரமாரி வெட்டு

ஆவடி: பேசுவதற்கு செல்போன் தர மறுத்ததால் ஆத்திரத்தில் மொபைல் ஷோரூம் ஊழியருக்கு சரமாரியாக உருட்டுக்கட்டையால் அடி, உதை கத்தியால் சரமாரி வெட்டு விழுந்துள்ளது. ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(27). மொபைல் ஷோரூம் ஊழியர். இவரும், இவரது நண்பரும், நேற்றுமுன்தினம் இரவு திருமுல்லைவாயல் அருகே சரஸ்வதி நகர் பிரதான சாலையில் நடந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக தென்றல் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(22) என்பவர் பைக்கில் வந்தார்.

வெங்கடேசன் அருகே பைக்கை நிறுத்தி, ‘உங்களது செல்போனை கொடுங்கள். பேசி விட்டு தருகிறேன்’ என கேட்டுள்ளார். அதற்கு வெங்கடேசன் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திமடைந்த மணிகண்டன், வெங்கடேசனை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.சிறிது நேரம் கழித்து 5 பேருடன் மணிகண்டன் மீண்டும் பைக்கில் வந்தார். அப்போது, வெங்கடேசனை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். மேலும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலையில் வெட்டினர்.

பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு அனைவரும் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த வெங்கடேசன் அலறி துடித்தார். இவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வெங்கடேசனை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு வெங்கடேசனுக்கு தலையில் 57 தையல்கள் போடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து நேற்று மணிகண்டனை கைது செய்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த மணிகண்டனின் நண்பர்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பேசுவதற்கு செல்போன் கேட்டு தர மறுத்த மொபைல் ஷோரும் ஊழியருக்கு கத்தியால் சரமாரி வெட்டு appeared first on Dinakaran.

Tags : Avadi ,Venkatesan ,Thirumullaivayal Theral Nagar ,Mobile ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...