×

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் காதலன் தூக்கிட்டு தற்கொலை: காதலியிடம் தீவிர விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டநிலையில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சேது (28). இவர், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிநயா (22). இவரும் சேது, வேலை செய்யும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.

இருவருக்குமிடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நிச்சயிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சேது, அபிநயா இருவரும் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றிப் பார்க்க வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாலை காஞ்சிபுரம் எண்ணெய்க்காரத் தெரு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டநிலையில் அபிநயா குளிக்க சென்றுள்ளார்.

அப்போது, சேது அங்குள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த அபிநயா, அதிர்ச்சி அடைந்து தனியார் விடுதி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விஷ்ணுகாஞ்சி போலீசார் உயிரிழந்த சேது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உடன் தங்கியிருந்த அபிநயாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் காதலன் தூக்கிட்டு தற்கொலை: காதலியிடம் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Sethu ,Chungwarchatram ,Kanchipuram district ,Chungwarchatra ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நகைக்காக மூதாட்டி கொலை!!