×

அறையில் வாக்குமூலம் அளித்த பெண்ணிடம் சீண்டல்; மாஜிஸ்திரேட் மீது பாலியல் குற்றச்சாட்டு: திரிபுரா நீதிமன்றத்தில் பரபரப்பு

திரிபுரா: வாக்குமூலம் அளித்த பெண்ணிடம் மாஜிஸ்திரேட் ஒருவர் பாலியல் சீண்டல் ெசய்த விவகாரம் குறித்து கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தலைமையிலான 3 பேர் குழு விசாரணை நடத்தி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின் கமலாபூர் குற்றவியல் நடுவரின் அறைக்கு, கடந்த 16ம் தேதி பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வாக்குமூலம் அளிக்க சென்றார். அப்போது அந்தப் பெண்ணிடம், குற்றவியல் நடுவர் (மாஜிஸ்திரேட்) பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இவ்விவகாரம் குறித்து கமலாபூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி முன் அந்தப் பெண் அளித்த புகாரில், ‘கடந்த 16ம் தேதி குற்றவியல் நடுவர் அறைக்கு, எனது தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்யச் சென்றேன். அப்போது என்னிடம் நீதிபதி பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார். அறைக்குள் நடந்த சம்பவத்தை எனது வழக்கறிஞரிடமும் என் கணவரிடமும் தெரிவித்தேன்’ என்றார். மேற்கண்ட சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவர், கமல்பூர் பார் அசோசியேஷனில் தனியாக புகார் அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி கவுதம் சர்க்கார், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சத்யஜித் தாஸ், கமலாபூர் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தலைமையிலான 3 பேர் குழு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து பார் அசோசியேஷன் செயலாளர் ஷிபேந்திர தாஸ்குப்தா கூறுகையில், ‘மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு, கமலாபூர் பார் அசோசியேஷன் உறுப்பினர்களிடமும், பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் விசாரணை நடத்தி உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, அந்த குழுவினர் முடிவெடுத்து அறிவிப்பார்கள்’ என்றார். நீதி வழங்க வேண்டிய குற்றவியல் நீதிபதியே பாலியல் புகாரில் சிக்கிய விவகாரம், திரிபுராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அறையில் வாக்குமூலம் அளித்த பெண்ணிடம் சீண்டல்; மாஜிஸ்திரேட் மீது பாலியல் குற்றச்சாட்டு: திரிபுரா நீதிமன்றத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tripura ,Kamalapur ,North-Eastern ,Kamalapur Criminal Magistrate's… ,Tripura Court ,
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை