டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் 20 வாக்குகள் பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளரின் 8 ஓட்டுகள் செல்லாது என அறிவித்த தேர்தல் அதிகாரி, 16 வாக்குகள் பெற்ற பாஜ வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதில் மோசடி நடந்திருப்பதாகவும், திட்டமிட்டு 8 ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக மேயர் தேர்தல் நீதிபதி கண்காணிப்பில் நடத்தக் கோரியும் ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் – ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது.
பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு ஆம் ஆத்மி இடைக்கால தடையும் கோரியது. அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்க உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் வழக்கு தொடர்ந்தார். கடந்த 5-ம் தேதி ஜனநாயகத்தை இப்படி படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கண்டித்தது. மேலும், தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகள், தேர்தல் நடைமுறை பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்கள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை உயர்நீதிமன்ற பதிவாளர் மூலம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. மேலும், சண்டிகார் மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரையும் காலவரையின்றி ஒத்தி வைக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி அனில் மஸியை நேரில் அழைத்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்தக் கட்சியையும் சாராத புதிய தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமிக்க உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், வாக்குச்சீட்டில் குறியிடும் போது கேமராவை பார்த்து என்ன செய்தீர்கள் என்று தேர்தல் அதிகாரிக்கு தலைமை நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் வாக்குச்சீட்டுகளை எண்ணி முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச்சீட்டுகளுடன் உயர்நீதிமன்ற பதிவாளர் நாளை ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைமுறையில் தலையிட்ட தேர்தல் அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
The post சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு: பாஜகவுக்கு ஆதரவாக தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.