×

விவசாயி குத்திக்கொலை அண்ணன் மகன்கள் 2 பேர் கைது விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு

திருவண்ணாமலை பிப்.18: விவசாய நிலத்துக்கு பொதுகிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் விவசாயியை குத்திக்கொலை செய்த அண்ணன் மகன்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அண்ணனை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த மாதலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கண்ணன்(65), விவசாயி. இவருக்கு, மனைவி மற்றும் 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், விவசாயி கண்ணனுக்கும் அவரது அண்ணன் சக்கரை(70) என்பவருக்கும் தலா 3 ஏக்கர் விளை நிலம் உள்ளது. எனவே, இருவருக்கும் உரிமையுள்ள பொதுக்கிணற்றிலிருந்து விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை கண்ணன் அவருக்கு சொந்தமான விளை நிலத்தில் குடும்பத்தினருடன் மணிலா அறுவடையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அண்ணன் சர்க்கரை மற்றும் அவரது மகன்கள் ஞானசேகர்(36) செல்வமணி(32) ஆகியோர், கண்ணனிடம் தகராறு செய்துள்ளனர். பொதுக்கிணற்றில் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில் மணிலா பறிப்பதற்காக எப்படி தண்ணீரை நிலத்துக்கு பாய்ச்சலாம் என கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது.

ஆத்திரம் அடைந்த சர்க்கரை மற்றும் அவரது மகன்கள் அங்கிருந்த கத்தியை எடுத்து கண்ணன் வயிற்றில் குத்தியுள்ளனர். அதில், ரத்த வெள்ளத்தில் கண்ணன் சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து, கண்ணனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், ஞானசேகர் மற்றும் அவரது தம்பி செல்வமணி ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், தப்பி ஓடி தலை மறைவாக உள்ள முதியவர் சர்க்கரையை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post விவசாயி குத்திக்கொலை அண்ணன் மகன்கள் 2 பேர் கைது விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Madalambadi ,Tiruvannamalai ,Kuthikolai Annan ,
× RELATED சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே...