×

சிறுவனுடன் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

பெரம்பூர்: ஓட்டேரி, கீழ்ப்பாக்கம் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அயனாவரம் பங்காரு தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் (56), பால் வியாபாரி. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் பால் வியாபாரம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் ஏ.கே. சாமி நகர் 7வது தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத 2 பேர் தர்மலிங்கத்தின் இரு சக்கர வாகனத்தை முந்திக்கொண்டு வந்து சட்டையின் மேல் பாக்கெட்டில் இருந்த செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்றனர்.

கொசப்பேட்டை கந்தசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (29), அம்பத்தூர் பகுதியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை குன்னூர் நெடுஞ்சாலை ஓட்டேரி மேம்பாலம் அருகே பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வாசுதேவனின் செல்போனை பிடுங்கிக்கொண்டு தப்பினர். இதுகுறித்து தர்மலிங்கம், வாசுதேவன் தலைமைச் செயலக காலனி போலீசாரிடம் புகார் அளித்தனர். இரு புகார்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் இரண்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நேற்று முன்தினம் வில்லிவாக்கம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த நிரஞ்சன் (19) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் நண்பரான அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் நிரஞ்சன் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிறுவனை தேடி வருகின்றனர்.

The post சிறுவனுடன் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Otteri, Kilpakkam ,Dharmalingam ,Ayanavaram Bangaru Street ,A.K. ,Kilpakkam ,Sami ,
× RELATED நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால்...