×

காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாததை அடுத்து அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடும்படி டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி நீதிமன்றம், விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோரும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மனீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதால் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் நேரில் ஆஜராக இயலவில்லை என கெஜ்ரிவால் விளக்கம் தெரிவித்துள்ளார். மார்ச் 16-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கெஜ்ரிவால் கொண்டுவந்துள்ளார். தீர்மானத்தின் மீதான விவாதமும் இன்று நடைபெற உள்ளதால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Kejriwal ,Enforcement Directorate ,Delhi government ,Dinakaran ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை...