×

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும்: முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

கொல்கத்தா: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் கொல்கத்தாவில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும். ஜனநாயகத்தில் இருந்து விலகி, எதேச்சதிகாரத்துக்கு நாட்டை கொண்டு சென்றுவிடுவார்கள்.

பல நாடுகளில் தேர்தல்களில் ஆட்சியர்களோ, ஆளுங்கட்சிகளோ வெற்றியை அறிவிப்பதைப் போல இந்தியாவிலும் நடக்கும். ஒன்றிய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக கட்சிகளை மிரட்டி பிளவுபடுத்தி வருகிறது. ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம். அது பா.ஜ.க.வுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால், மத்திய விசாரணை முகமைகள் மூலம் மற்ற கட்சிகளை மிரட்டி, பிளவுபடுத்தி ஒரு அணியை உருவாக்கி வருகிறது. அதன் கூட்டணி கட்சிகளை பார்த்தாலே தெரியும்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு, சிவசேனாவின் ஒரு பிரிவு மற்றும் அ.தி.மு.க.வின் ஒரு பிரிவு ஆகியோர்தான் அங்கு உள்ளனர். தற்போது ஐக்கிய ஜனதாதளத்தையும் தங்களது கூட்டணியில் ஐக்கியப்படுத்தியுள்ளனர். இந்த கூட்டணியை துப்பாக்கி முனையில் நடந்த கட்டாயத் திருமணம் என்றே குறிப்பிடலாம். அதேசமயம் காங்கிரஸ் முன்னெடுக்கும் கூட்டணியானது ஒருவரை ஒருவர் மதிக்கும் வகையில் உள்ளது.

ஒருவருக்கொருவர் கொடுக்கவும் வாங்கவும் தயாராக இருக்கும் கட்சிகளுக்கு இடையே கூட்டணியை உருவாக்கி வருகிறோம். இதுதான் இரண்டு கூட்டணிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுடனான கூட்டணி முறிந்துவிடவில்லை என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். எனவே இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெறாது என்ற முடிவுக்கு வரமுடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரானது. கூட்டாட்சிக்கு எதிரான வினோதமான யோசனை. இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும்: முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Former Union Finance Minister ,P Chidambaram ,Kolkata ,P. Chidambaram ,
× RELATED “நாட்டை சர்வாதிகார பாதையில் கொண்டு...