×

கன்டோன்மென்ட் நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்

பல்லாவரம்: சென்னை பல்லாவரம் வாரச்சந்தையில் சுமார் 1200 சாலையோர நடைபாதை கடைகள் இயங்கி வந்தன. வாடகையாக 1200 கடைக்காரர்களும் நாளொன்றுக்கு தலா ரூ.500 கட்டணமாக பல்லாவரம் கன்டோன்மென்ட் நிர்வாகத்துக்கு கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை பல்லாவரம் வாரச் சந்தையில் 600 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று பல்லாவரம் கன்டோன்மென்ட் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் வாரச் சந்தையில் கடைகள் அமைப்பதற்காக வந்த ஏராளமான சிறுவியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து கன்டோன்மென்ட் நிர்வாக அதிகாரிகளிடம் வியாபாரிகள் கேட்டதற்கு, அவர்கள் உரிய பதிலளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கன்டோன்மென்ட் நிர்வாகத்தின் அடாவடி போக்கை கண்டித்து, வாரச் சந்தையில் கடை நடத்தும் 100க்கும் மேற்பட்ட சிறுவியாபாரிகள், அவ்வழியே சென்ற வாகனங்களை வழிமறித்து திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, கன்டோன்மென்ட் நிர்வாகத்துக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். பல்லாவரம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுவியாபாரிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post கன்டோன்மென்ட் நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Cantonment administration ,Pallavaram ,Chennai ,Pallavaram Cantonment administration ,
× RELATED வெயிலில் சுருண்டு விழுந்து 2 பேர் பலி