×

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை தற்காலிகமாக பயன்படுத்த வருமான வரி மேல்முறையீட்டு வரி தீர்ப்பாயம் அனுமதி!!

டெல்லி : காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை தற்காலிகமாக பயன்படுத்த வருமான வரி மேல்முறையீட்டு வரி தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான், “காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணியின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. 2018 -19 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி வருமான வரித்துறையினர் கணக்குகளை முடக்கி உள்ளனர். மேலும் கட்சியின் வங்கி கணக்குகளை மீட்க ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வங்கிக் கணக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயகமே முடக்கப்பட்டிருக்கிறது.

வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே காங்., வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. 2018-ல் வருமான வரி தாக்கல் தாமதத்துக்கு இப்போது தேர்தல் நெருங்கும்போது நடவடிக்கை எடுத்தது உள்நோக்கம் கொண்டது. எதிர்கட்சிகளின் வங்கிக்கணக்குகளை முடக்குவது, ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம். வருமான வரித்துறை நடவடிக்கையால் ராகுலின் நீதி யாத்திரை மட்டுமின்றி அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் முடங்கும். வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால் மின்கட்டணம் செலுத்த, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட பணமில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலையில் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை விசாரித்த தீர்ப்பாயம் வங்கி கணக்கு முடக்கத்துக்கு தற்காலிகமாக விலக்கு வழங்கி உத்தரவிட்டது. இதன்மூலம் முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.

The post காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை தற்காலிகமாக பயன்படுத்த வருமான வரி மேல்முறையீட்டு வரி தீர்ப்பாயம் அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : Income Tax Appellate Tribunal ,Congress party ,Delhi ,Income Tax Appellate Tax Tribunal ,Congress ,treasurer ,Ajay Makan ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...