சேலம், பிப்.16:சேலம் இரும்பாலை அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள இலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (26). இவர் தறித்தொழிலோடு பட்டாசு வெடிக்கும் வேலையும் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி கோகிலா(24) என்ற மனைவியும், 6வயதில் ஒரு பெண் குழந்தையும், 9 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியில் குழிஇருசாயி அம்மன் கோவில் தெவத்திருவிழாவில் சக்திவேல் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக வானத்தில் வெடித்து சிதறிய தீப்பொறி, சக்திவேலின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாசு பாக்சின் மீது பட்டு வெடித்து சிதறியது. இதில் படுகாயம் அடைந்த சக்திவேலை மீட்டு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில், சக்திவேலுக்கு 75 சதவீத தீக்காயம் ஏற்பட்டதையடுத்து, தசை சேதமடைந்த கால் துண்டிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சக்திவேல் உயிரிழந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பட்டாசு விபத்தில் கருகிய வாலிபர் பலி appeared first on Dinakaran.