×

புதிய வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் தமிழகத்தில் ஐடி மாநாடு பிப்.23, 24ல் நடத்தப்படும்: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல்

பேரவையில் கேள்வி நேரத்தின் போது மேட்டுப்பாளையம் ஏ.கே.செல்வராஜ்(அதிமுக): கோவை மாவட்டம் காரமடை பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அரசு முன்வருமா?
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: கோவை விளாங்குறிச்சியில் 61.59 ஏக்கரில் ரூ.107 கோடி முதலீட்டில் எல்காட் நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கி உள்ளது. அதேபோல, 3524 சதுர அடியில் அங்கு நிர்வாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அங்கு குத்தகை அடிப்படையில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 16,809 பணியாளர்களுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடம் தரும் வகையில் 2.66 லட்சம் சதுர அடியில் கட்டுமான பணி நடந்து வருகிறது.

எனவே காரமடையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தேவையில்லை. வேலைவாய்ப்பை அதிகம் தரும் துறை ஐடி துறை தான். ஆண்டுதோறும் சராசரியாக 4-5 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்கள் புதிதாக கட்டிடம் கட்டுவார்கள். ஆனால் கடந்த ஒரே ஆண்டில் சென்னையில் 11 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன . எல்காட் நிறுவனம் கடந்த ஆட்சியில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டினர். எனவே அவற்றை திறக்க முடியாத நிலை உள்ளது. மனித வளம் தான் தமிழகத்தின் முக்கிய சக்தி. இந்தியாவிலே தமிழகத்தில் தான் ஆண்டிற்கு 17% பொறியியல் பட்டதாரிகள் படித்து வெளிவருகிறார்கள். பெங்களூரு, ஐதராபாத்தில் இருந்து வெளியேறும் ஐடி நிறுவனங்கள் கோவை, மதுரையை நோக்கி வருகின்றன. வரும் 23, 24ம் தேதி தமிழகத்தில் ஐடி மாநாடு நடைபெற உள்ளது. அதில் புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் ஈர்க்கப்படும்.

The post புதிய வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் தமிழகத்தில் ஐடி மாநாடு பிப்.23, 24ல் நடத்தப்படும்: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,PDR Palanivel Thiagarajan ,Mettupalayam ,AK Selvaraj ,ADMK ,Karamadai ,Coimbatore ,PDR Phalanivel Thiagarajan ,Elcot ,Vilangurichi ,Dinakaran ,
× RELATED ஐடி, ஈடி, சிபிஐக்கு ரூ.56 கோடி,...