×

2 குரங்குகள் தப்பி சென்றதால் மன உளைச்சல்; மயங்கிவிழுந்து பெண் ஊழியர் சாவு:வண்டலூர் பூங்காவில் சோகம்

தாம்பரம்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 2 குரங்குகள் தப்பிசென்றதால் மனஉளைச்சலில் இருந்த பெண் ஊழியர் மயங்கிவிழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, யானை மற்றும் அரியவகை பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து விலங்குகளை பார்வையிட்டு செல்கின்றனர். பூங்காவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் சுகுணா (52). இவர், உயிரியல் பூங்கா மருத்துவமனை வளாகம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விலங்கு கூண்டுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு வந்த சுகுணா, திடீரென பூங்கா வளாகத்தில் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு நந்திவரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுகுணாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து பூங்கா ஊழியர்களிடம் கேட்டபோது, ”சுகுணா கடந்த 10 ஆண்டுக்கு மேலாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்காலிகமாக வேலை செய்து வந்தார். சமீபத்தில் வண்டலூர் பூங்காவிற்கு உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து 10 அனுமன் குரங்குகள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை உணவு வைக்கும்போது கூண்டில் இருந்து 2 குரங்குகள் தப்பித்து காட்டுப்பகுதிக்கு சென்றது. குரங்குகள் தப்பி சென்றபோது ஊழியர் ஜானும், சுகுணாவும் பணியில் இருந்தனர். இரண்டு நாட்கள் ஆகியும் குரங்குகளை கண்டுபிடிக்க முடியாததால் உயிரியல் பூங்கா அதிகாரிகள் சுகுணாவை திட்டியுள்ளனர். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் காலையில் இருந்து உணவு அருந்தாமல் இருந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்து இருக்கலாம்” என்றனர். இந்த சம்பவம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

The post 2 குரங்குகள் தப்பி சென்றதால் மன உளைச்சல்; மயங்கிவிழுந்து பெண் ஊழியர் சாவு:வண்டலூர் பூங்காவில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Vandalur Park ,Tambaram ,Vandalur zoo ,Arignar Anna Zoo ,Vandalur ,Chennai ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்