×

விவசாயிகள் அதிக மகசூல், லாபம் பெற எலுமிச்சை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்

*தோட்டக்கலைத்துறையினர் விளக்கம்

வலங்கைமான் : எலுமிச்சைகள் சாகுபடியில் ஏற்படும் பாதிப்புகளும் அவற்றினை சரி செய்யும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் பயிரிடப்படும் பழ மரங்களில் எலுமிச்சையும் ஒன்றாகும் .இது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாழை மா விற்கு அடுத்தபடியாக சாகுபடி செய்யப்படுகிறது பானங்கள் மற்றும் ஊறுகாய் பயன்பாட்டில் எலுமிச்சம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.

எலுமிச்சை வளர்ப்பில் 15 வகையான பூச்சிகளின் தாக்குதலால் பெரும் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இலையைக் குடையும் புழு, சில்லிட் ஒட்டுப் பூச்சி, அசுவிணி, கறுப்பு ஈ மற்றும் தாவர நூல் புழுக்களின் தாக்குதலால், எலுமிச்சைசெடிகள் சேதமடைந்துள்ளன. இலையை குடையும் புழுவானது, இளம் இலைகளைக் குடைந்து புறத் தோல்களுக்கு இடையிலான திசுக்களை உள்கொண்டு சேதத்தை விளைவிக்கிறது.

அதிகம் தாக்கப்பட்ட இலைகள் பலவித நெளிவு, வளைவுகளுடன் காணப்படுவதோடு, இலைகள் காய்ந்து, சிறுத்து, செடியின் நுனி வளர்ச்சி குன்றுவதுடன், பூக்கள் சரிவரப் பூப்பதில்லை. சில்லிட் ஒட்டுப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு இளம் கிளைகள், துளிர் இலைகள், மொட்டுகள், பூக்கள் உள்ளிட்ட பாகங்களில் இருந்து சாற்றை உறிஞ்சி அதிக சேதம் விளைவிக்கின்றன. பூச்சிகள் அதிகம் தாக்கப்பட்ட குருத்துப் பகுதிகள் காய்ந்துவிடும். மேலும் இலைகள் சுருண்டும், நெலிந்தும் காணப்படும். பூச்சிகளை தொடர்ந்து, அசுவிணி மற்றும் கறுப்பு ஈ அதிகமாகத் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பூச்சிகள், தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால், இலைகள் பிசுபிசுப்புடன் காணப்படும்.

இதனால், இலைகள் கருமையாகமாறி, கரும்படல நோயைத் தோற்றுவிப்பதோடு, ஒளிச்சேர்க்கையும் தடைபட்டு, மகசூல் குறைந்து வருகிறது. மேலும் இந்தப் பூச்சிகள் டிரிடிசா என்ற வைரஸ் நோயையும் பரப்புகின்றன.சரியான பதத்தில் நீர்ப் பாய்ச்ச வேண்டும். வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை ஒட்டும் திரவம் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும். மரத்துக்கு மரம் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.

மேலும் ஒட்டுப் பொறிகளை ஒர் ஏக்கருக்கு 5 வீதம் வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். நன்மைசெய்யும் எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாணங்களை அதிகமாப் பெருகவிட வேண்டும். நெருக்கமாக இருக்கும் செடிகளைச் சரியான இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.பூச்சிகளின் பாதிப்பு பொருளாதாரச் சேத நிலையை தாண்டும் போது ரசாயனப் பூச்சிக் கொல்லியான அசிபேட் மானோகுரோட்டாபாஸ், டைமீத்தையோட், மாலத்தியான், இம்மிடாகுளோ பிரிட் போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஓர் லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து செடிகளைச் சுற்றி நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். தாவர நூல் புழுக்களின் சேதம் இருக்கும்போது குருணை மருந்து இட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எலுமிச்சை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post விவசாயிகள் அதிக மகசூல், லாபம் பெற எலுமிச்சை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம் appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு