×

தீவுத்திடலை சுற்றி ஜூனுக்கு பிறகு பார்முலா-4 கார் ரேஸ் நடத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: பார்முலா கார் பந்தயம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, வழக்கறிஞர் நர்மதா சம்பத் வாதிடும்போது, கார் பந்தயத்தால் அரசுக்கு எந்த லாபமும் இல்லை. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, மழை வெள்ளம் காரணமாக கார் பந்தயம் ரத்து செய்யப்பட்டது. வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு பந்தயம் நடத்தப்படும். ராணுவம், கடற்படையின் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தயம் நடக்கும் சாலை 100 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ளது. அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும். மருத்துவமனையும் போட்டிக்கு தடையில்லா சான்று அளித்துள்ளது என்றார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post தீவுத்திடலை சுற்றி ஜூனுக்கு பிறகு பார்முலா-4 கார் ரேஸ் நடத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Formula-4 car ,Tamil Nadu government ,High Court ,CHENNAI ,Formula Car ,Mahadevan ,Mohammad Sabiq ,Formula 4 car ,Chennai island ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...