×

சென்னை புறநகர் மின்சார ரயிலில் திடீர் புகை: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

சென்னை:திருவள்ளூர் அருகே மின்சார ரயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு சாதாரண பயணிகள் மின்சார ரயில் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. அரக்கோணம் வழியாக திருவள்ளூர் நோக்கி செஞ்சிபனம்பாக்கம் – கடம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு இடையே வந்தபோது ரயிலில் பிரேக்கிங் சிஸ்டம் கோளாறு காரணமாக பேட்டரியில் இருந்து திடீரென புகை வெளிவந்தது. இதனால் ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. மின்சார ரயிலின் பேட்டரியிலிருந்து புகை வந்ததையடுத்து, ரயில் தீப்பிடித்து எரியத் தொடங்கியதாக நினைத்து பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி அலறியடித்து ஓடியுள்ளனர்.

இதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள், வேலைக்குச் சென்றவர்கள் என அனைத்து பயணிகளும் செய்வதறியாமல் நடுவழியில் தவித்தனர். அதன் பின்னர் எதிரே வந்த ரயில் ஓட்டுனர், அந்த ரயிலை நிறுத்தி சோதனை செய்து புகை வருவதை கட்டுப்படுத்தினார்.

இதனால் 30 நிமிடத்திற்குப் பிறகு மின்சார ரயில் மெதுவாக புறப்பட்டு கடம்பத்தூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனையடுத்து மீண்டும் ரயிலை இயக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை ரயில் ஓட்டுனர் சோதனை செய்தார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் 20 நிமிடம் கழித்து ரயில் மெதுவாக புறப்பட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. அப்போது பெரும்பாலான பயணிகள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கி வேறு ரயில்களில் ஏறிச் சென்றனர்.

The post சென்னை புறநகர் மின்சார ரயிலில் திடீர் புகை: பயணிகள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallur ,Vellore Cantonment Railway Station ,Chennai Beach ,Arakkonam ,
× RELATED ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது...