×

பெரியகுளம் பகுதிகளில் முதல் போக நெல் அறுவடை பணி ஜோரு

*கொள்முதல் நிலையம் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம் : முதல் போக நெல் சாகுபடி அறுவடை பணிகள் தீவிரம். அறுவடை பணிகள் துவங்கிய இரண்டு தினங்களிலேயே நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி.தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றி உள்ள தாமரைக்குளம், வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் சோத்துப்பாறை அணை மூலம் பாசன வசதியை பெற்று முதல் போக சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால் நடவு செய்யப்பட்ட முதல் போக சாகுபடியில் நல்ல விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது.

முதல் போகமாக என்.எல்.ஆர், ஜெ.ஜி.எல் 1798, ஐ.ஆர் 20, நெல்லூர் 449, உள்ளிட்ட ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர். தற்பொழுது ஜெயமங்கலம் மற்றும் தாமரைக்குளம் பகுதியில் விளைந்த நெல்லை விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறுவடை பணிகள் துவங்கிய இரண்டு தினங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகள் அறுவடை செய்யும் நெல் கொள்முதல் செய்யும் பணி துவக்கி காலதாமதம் இன்றி விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தொடர்ந்து பெய்த பருவ மழையால் இந்த ஆண்டு ஏக்கருக்கு 30 முதல் 35 மூடை அறுவடையாகி நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.

The post பெரியகுளம் பகுதிகளில் முதல் போக நெல் அறுவடை பணி ஜோரு appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Theni district ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி