×

‘எடப்பாடி பழனிசாமி சரியில்லைங்க…’ அதிமுக கரை வேட்டியை அவிழ்த்து வீசிய நிர்வாகி: நடுரோட்டில் பாஜவில் ஐக்கியம்


நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி தெரிவித்திருந்தார். ஆனால், சிறிய கட்சிகள் கூட அதிமுகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டவில்லை. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக குழு தலைமை அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தும் யாரும் வரவில்லை. இதுகுறித்து கருத்த தெரிவித்த ஓபிஎஸ், ‘கூட்டணிக்காக கடை போட்டு ஐஸ் விற்பது கேவலம்’ என தெரிவித்திருந்தார்.

இதேபோல் அமமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில், ‘தகுதியில்லாதவன் கையில் கட்சியும், பதவியும் உள்ளது. இலவு காத்தகிளிபோல் அதிமுக உள்ளது’ என்று ஒட்டப்பட்டிருந்தது. கூட்டணி விவகாரத்தில் அதிமுக தலைவர்கள், ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் விழுப்புரம் அருகே ஏமப்பூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி முத்துகுமரன் எடப்பாடி பழனிசாமி சரியில்லைங்க என்று கூறி அதிமுக கரைவேட்டியை நடுரோட்டில் அவிழ்த்துபோட்ட வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் பேசுகையில், ‘நான் ஏமப்பூர் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன். அதிமுகவில் கிளை கழக துணை செயலாளராக இருக்கிறேன். அதிமுகவை பிடிக்கவில்லை, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சரியாக செயல்படவில்லை. இதனால் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன்’ கூறி நடுரோட்டிலேயே அதிமுக கரைவேட்டியை அவிழ்த்த முத்துகுமரன், பாஜவில் மாவட்ட துணை தலைவர் வேலு முன்னிலையில் இணைந்தார்.

அவருடன் அதே பகுதியை சேர்ந்த மேலும் பலர் அதிமுக கரைவேட்டியை அவிழ்த்து வீசிவிட்டு பாஜவில் இணைந்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த பகுதி அதிமுக மாவட்ட செயலாளராக இபிஎஸ்சின் நெருங்கிய நண்பர் குமரகுரு பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post ‘எடப்பாடி பழனிசாமி சரியில்லைங்க…’ அதிமுக கரை வேட்டியை அவிழ்த்து வீசிய நிர்வாகி: நடுரோட்டில் பாஜவில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,AIADMK ,General Secretary ,Edappadi ,Karai Vetti ,BJP ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...