×

கோவை கார் வெடிப்பு மேலும் 4 பேர் கைது

கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 4 ேபரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022 அக்டோபர் மாதம் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஐமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கும் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ், இஸ்மாயில், அப்சல் கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த கோவை, நீலகிரி மாவட்டத்தைச் மேலும் 7 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் 13 பேர் மீதும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் அவ்வபோது சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இவ்வழக்கு தொடர்பாக சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களில் 27 இடங்களில் நேற்று முன்தினம் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் அடிப்படையில் கார் வெடிப்பு வழக்கில் பொள்ளாச்சி சையத் அப்துல் ரஹ்மான் உமரி (52), கோவை குனியமுத்தூரை சேர்ந்த இர்ஷாத் ஜமீல் (22), பொன்விழா நகரை சேர்ந்த மொஹமத் ஹூசைன் (38) மற்றும் ஜமின் பாஷா உமர் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 லேப்டாப்கள், 25 செல்போனகள், 34 சிம்கார்டுகள், 3 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

The post கோவை கார் வெடிப்பு மேலும் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,NIA ,Ukkadam Fort Iswaran Temple ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...