×

தனியார் நிகழ்ச்சிகளால் விபரீதம் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி: போலீசார் விசாரணை

சென்னை: நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தனியார் நிகழ்ச்சிக்கு எடுக்கப்பட்ட மின் இணைப்பு கேபிளில் மின்சாரம் பாய்ந்து 6ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். சென்னை மயிலாப்பூர் டிசெல்வா சாலையை சேர்ந்தவர் தயாள் சுந்தரம். இவரது மனைவி கீதா பிரியா. டாக்டர் தம்பதியான இவர்கள் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது 10 வயது மகன் ரியான் ஆதவ், ஆர்.ஏ.புரத்தில் உள்ள பிரபல பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கூடைப்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்ததால், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.

இதனால் பள்ளி முடிந்து ரியான் ஆதவ் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்தார். நேற்று முன்தினம் மாலையும் அவர் பயிற்சிக்கு சென்றார். வார இறுதி நாட்களில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று இசைக்கச்சேரி உட்பட 5 தனியார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தனியார் நிகழ்ச்சிக்காக பாதுகாப்பற்ற முறையில் மின்சாரம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவன் ரியான் ஆதவ் மீது அங்கிருந்த மின் கேபிளில் கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயக்கமடைந்தார். சக மாணவர்கள் உடனே ஒய்எம்சிஏ நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். அதன்படி 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெற்றோர் பணியாற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

அதை கேட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். புகாரின்படி சைதாப்பேட்டை போலீசார் விபத்து நடந்த ஒய்எம்சிஏ மைதானத்தை தனியார் அமைப்புகளுக்கு வாடகைக்கு விடும் பொறுப்பு அதிகாரி ஜான் சுதர்சன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்பற்ற முறையில் மின்சாரம் கொண்டு சென்ற கேபிளில் மின் கசிவு ஏற்பட்டு மாணவன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

The post தனியார் நிகழ்ச்சிகளால் விபரீதம் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nandanam YMCA ,Chennai ,Dayal Sundaram ,Tselva Road, Mylapore, Chennai ,Geeta Priya ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...