×

ஊழல்வாதிகளுக்குதான் அமிர்த காலம்: ராகுல்

புதுடெல்லி: டெல்லியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் கீழ் ரூ.777 கோடியில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி கடந்த 2022, ஜூன் 19ம் தேதி திறந்து வைத்தார். இந்த சுரங்கப்பாதையில் நீர் கசிவு காரணமாக ஒரே ஆண்டில் சரி செய்ய முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளதாகவும், இதற்காக கட்டுமான பணி மேற்கொண்ட தனியார் நிறுவனம் முன்பணமாக ரூ.500 கோடியை டெபாசிட் செய்து, உடனடியாக பழுதுபார்ப்பு பணிகளை தொடங்க வேண்டுமென டெல்லி அரசின் பொதுப்பணித்துறை உத்தரவிட்டது. இதற்கு சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனம், அவதூறு கருத்துக்களை பரப்புவதாக பொதுபணித்துறை நஷ்ட ஈடாக ரூ.500 கோடி வழங்க எதிர் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘ஊழல்வாதிகளுக்குதான் நாட்டில் அமிர்த காலம் இருக்கிறது. ரூ.777 கோடியில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதை ஓராண்டில் பயன்படுத்த முடியாத நிலையில் மாறி உள்ளது. பிரதமர் மோடி ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திலும் திட்டமிடாமல் மாடலிங் செய்து வருகிறார். மேலும், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவை ஊழலுக்கு எதிராக போராடவில்லை. ஜனநாயகத்திற்கு எதிராக போராடுகின்றன’’ என கூறி உள்ளார்.

 

The post ஊழல்வாதிகளுக்குதான் அமிர்த காலம்: ராகுல் appeared first on Dinakaran.

Tags : Rahul ,New Delhi ,Modi ,Pragati Maidan tunnel ,Delhi ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு,...