×

பீர் வாங்கி கொடுக்க மறுத்த தகராறு ஆட்டோ டிரைவரை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டு: கோயம்பேட்டில் நள்ளிரவு பரபரப்பு

அண்ணாநகர்: மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சரவணன் (38), கோயம்பேடு காளியம்மன் கோயில் தெருவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 8ம் தேதி அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் சரவணனிடம் வந்து பீர் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு சரவணன், என்னிடம் பணம் இல்லை என்றதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டுள்ளனர். உடனே ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த சக ஆட்டோ டிரைவர்கள் சண்டையை விலக்கி விட்டு சமாதானம் செய்து இருவரையும் வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், ஆத்திரம் அடைந்த அரும்பாக்கம் ஆட்டோ டிரைவர் நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு 12.30 மணி அளவில் கோயம்பேடு காளியம்மன் கோயில் தெருவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்றுள்ளார். அங்கு சவாரிக்காக காத்திருந்த டிரைவர் சரவணனிடம் சென்று, ‘பீர் வாங்கி கொடுக்க சொன்னால் நீ வாங்கி கொடுக்க மாட்டாயா’ எனக்கேட்டு சரவணணை சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் கத்தியால் சரவணனை வெட்டியுள்ளனர். உயிரை காப்பாற்ற கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடிய சரவணனை நடுரோட்டில் ஓடஓட விரட்டி தலையில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

இதை பார்த்து பொதுமக்கள் பீதி அடைந்து ஓடினர். பிறகு படுகாயம் அடைந்த சரவணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரவணனின் தலையில் 5 தையல் போடப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 3 பேர் சரவணனை கத்தியால் வெட்டுவது தெரிய வந்தது. போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post பீர் வாங்கி கொடுக்க மறுத்த தகராறு ஆட்டோ டிரைவரை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டு: கோயம்பேட்டில் நள்ளிரவு பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Annanagar ,Saravanan ,Maduravayal Pilliyar Koil Street ,Koyambedu Kaliamman Koil Street ,Arumbakkam ,Saravanan… ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்