×

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு கேடயம்: அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்

சென்னை: கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு கேடயத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ம் தேதி கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, நேற்று சென்னை தி.நகரில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் தாங்கினார். தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை காவல் ஆணையர் கோ.வனிதா, சென்னை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ரா.ரெங்கராஜன், அரியலூர் மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் பெ.தமிழ்ச்செல்வன், நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எல்.திருநந்தன் ஆகியோருக்கு கேடயங்களை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், ” 1.4.2023 முதல் 31.1.2024 வரை கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்ட 188 தொழிலாளர்களுக்கு ரூ.54.30 லட்சம் உடனடி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழித்திட தொழிலாளர் துறையுடன் ஒருங்கிணைந்து அனைத்து பிற துறைகளின் அமலாக்க அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினை கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நமது முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவினை நனவாக்க அனைவரும் உறுதி ஏற்போம்\\” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய செயலாளர் ஆர்.தமிழ்ச் செல்வி, சென்னை, காவல் துணை ஆணையர் (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு) வனிதா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வே.செந்தில் குமார், கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், தொழிலாளர் இணை ஆணையர்கள், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் தொடர்புடைய பிற துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், வேலையளிப்போர் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு கேடயம்: அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Abolition of ,Bonded Labor Day ,Minister ,C.V.Ganesan. ,CHENNAI ,C.V.Ganesan ,of ,Tamilnadu ,Bonded Labor Abolition Day ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...