×

அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது

சென்னை: கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில் மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது

கொத்தடிமைத் தொழிலாளர் முறையினை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ம் தேதி கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரித்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று (09.02.2024) சென்னை, தி.நகரில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் , தலைமையில், முதன்மைச் செயலாளர், தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த் முன்னிலையில் மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்து, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின “உறுதிமொழி”-யினை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை காவல் ஆணையர் முனைவர் கோ. வனிதா, சென்னை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ரா.ரெங்கராஜன், அரியலூர் மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் பெ.தமிழ்ச்செல்வன், நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எல். திருநந்தன் ஆகியோர்களுக்கு கேடயங்களை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பேசிய போது 01.04.2023 முதல் 31.01.2024 வரை கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்ட 188 தொழிலாளர்களுக்கு ரூ.54.30 இலட்சம் உடனடி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறையினை ஒழித்திட தொழிலாளர் துறையுடன் ஒருங்கிணைந்து அனைத்து பிற துறைகளின் அமலாக்க அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றும், 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினை கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நமது தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் கனவினை நனவாக்க அனைவரும் உறுதி ஏற்போம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வி, சென்னை, காவல் துணை ஆணையர் (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு) கோ.வனிதா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வே.செந்தில் குமார், கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், தொழிலாளர் இணை ஆணையர்கள், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் தொடர்புடைய பிற துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், வேலையளிப்போர் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Minister ,Day ,Ganesan ,Chennai ,Labor Welfare and Skill Development ,C.V. ,Dinakaran ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து