×

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் அண்ணன் கொடூர கொலை

* காதலன் வெறிச்செயல்

* புதுகையில் பயங்கரம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் நேற்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை அடப்பன் வயல் 6ம்வீதியை சேர்ந்த சிங்காரம் மகன் ஒச்சிகார்த்தி என்ற கார்த்தி (25). இவரது தங்கையும், புதுக்கோட்டை மேல 6ம் வீதியை சேர்ந்த அரியமுத்து மகன் சீனிவாசனும் (29) தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கார்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் காதலியின் அண்ணன் கார்த்திக்குக்கும், காதலன் சீனிவாசனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக இருவருக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை விஸ்வதாஸ் தெருவில் கார்த்தி புதிதாக கட்டி வரும் வீட்டில் உள்பகுதியில் பூச்சு வேலை நடக்கிறது. இதில் 3 கொத்தனார்கள் ஈடுபட்டிருந்தனர். இதனை பார்க்க கார்த்தி நேற்று மாலை சென்றுள்ளார். அப்போது பைக்கில் காதலன் சீனிவாசன், இவரது நண்பர்கள் அடப்பன்வயல் 3ம் வீதியை சேர்ந்த நெருப்பு தினேஷ் (எ) தினேஷ் பாபு, பலூன் ஆகிய 3 பேரும் வந்துள்ளனர். இதில் சீனிவாசன், பலூன் ஆகிய இருவரும் வீட்டின் போர்ட்டிகோவில் கத்தியுடன் நின்றுள்ளனர்.

வீட்டின் பின்புறம் வழியாக கத்தியுடன் உள்ளே நுழைந்த நெருப்பு தினேஷ், கார்த்தியை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயத்துடன் அவரிடமிருந்து தப்பி வெளியே வந்த போது சீனிவாசனும், பலூனும் சேர்ந்து கார்த்தியை மாறிமாறி கத்தியால் குத்தினர். இதில் தலையில் பலத்த காயத்துடன் கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் காதலன் உட்பட 3 பேரும் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர்.

தகவலறிந்த எஸ்பி வந்திதாபாண்டே மற்றும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான காதலன் உட்பட 3பேரையும் தேடி வருகின்றனர். டவுன் டிஸ்பி ராகவி தலைமையில் அமைக்கப்பட்டிருந்த 3 தனிப்படையினரும் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொத்தனார் செல்போன்களை ஆய்வு

கொலையான கார்த்தி வீடு கட்டும் பணியில் அவரது நண்பர்கள் தான் கொத்தனார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தனிப்படை போலீசார் முதலாவதாக அவர்களது செல்போன்களை வாங்கி கொலை சம்பவம் நடப்பதற்கு முன் யார், யாரிடம் பேசியுள்ளனர் என்பதை தீவிரமாக ஆராய்ந்தனர். இதில் சந்தேகத்திற்கு உரிய அழைப்புகள் குறித்து அவர்களிடம் தனிப்படை போலீசார் கேட்டறிந்தனர்.

கத்திக்கொண்டே தெருவில் சென்ற கொலையாளிகள்

கார்த்தியை கொலை செய்த மூன்று பேரும், தங்கள் வந்த பைக்கில் தப்பி புதுக்கோட்டை நகர் நோக்கி வந்துள்ளனர். அப்போது 3 பேரும் எல்லாம் முடிஞ்சது என்று கத்திக்கொண்டே சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வாக்கி டாக்கியில் அலார்ட்

கொலை நடந்த தகவல் போலீசுக்கு தெரிந்தவுடன் புதுக்கோட்டை நகர் பகுயில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள், பீட் காவலர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் போலீஸ் கண்கானிப்பு பணியை தீவிரப்படுத்தினர். எஸ்பி தலையிலான தனிப்படையினர், கொலை சம்பவம் நடந்த இடம் முதல் கொலையாளிகள் பைக்கில் தப்பி சென்ற வழித்தடங்களில் மப்டியில் தீவிர விசாரணையில் இறங்கினர்.

The post காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் அண்ணன் கொடூர கொலை appeared first on Dinakaran.

Tags : Pudukottai Pudukottai ,Pudukottai ,Singaram ,Ochikarthi ,Puthukkottai Adappan Way 6 Road ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...