×

சிவகாசி-விருதுநகர் சாலையில் அதிவேகமாக செல்லும் மினி பஸ்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

சிவகாசி, பிப். 9: சிவகாசி-விருதுநகர் சாலையில் அதிவேகமாக செல்லும் மினி பஸ்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சிவகாசியில் இருந்து சாட்சியாபுரம், விஸ்வநத்தம், திருத்தங்கல், சித்துராஜபுரம் வழித்தடத்தில் மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. சாட்சியாபுரத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இங்கு பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். இதேபோன்று விஸ்வநத்தம், திருத்தங்கல், சித்துராஜபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

சிவகாசி-விருதுநகர் மெயின் சாலையில் மினி பஸ்கள் அதிவேகமாக செல்கின்றன. இந்த சாலையில் போக்குவரத்து தடுப்புகள், வேகத்தடைகள் எதுவும் இல்லாததால் வேகமாக செல்லும் மினி பஸ்களால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மினி பஸ்கள் திடீர் திடீரென சாலையில் வாகனத்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆட்களை அதிகமாக ஏற்றுவதற்காக மற்ற வாகனங்களுக்கும் வழி விடாமல் சாலையின் நடுவில் மறித்தபடி செல்கின்றனர்.

மேலும் அரசு பஸ்சில் பெண்கள் பயணிக்க இலவசம் என்பதால் முன்கூட்டியே பயணிகளை ஏற்றி செல்வதற்காக மினி பஸ்கள் அதிவேகமாக செல்வதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனால் பல நேரங்களில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழப்பதால் விபத்துகள் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதே போல் விஸ்வநத்தம், சித்துராஜபுரம் பகுதியிலும் மினி பஸ்கள் இஷ்டம் போல் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. அரசு போக்குவரத்து அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அனுமதி பெறாத வழித்தடத்திலும் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிவேகமாக இயக்கப்படும் மினி பஸ்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிவகாசி-விருதுநகர் சாலையில் அதிவேகமாக செல்லும் மினி பஸ்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivakasi-Virudunagar road ,Sivakasi ,Sathiyapuram ,Viswanantham ,Thiruthangal ,Chithurajapuram ,Satshyapuram… ,Sivakasi-Vridhunagar road ,Dinakaran ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை