×

முதல்வர் மு.க.ஸ்டாலின் 33 மாத ஆட்சியில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகளுடன் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழகத்தில் மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 33 மாத ஆட்சி காலத்தில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் சென்னையில் வள்ளுவர் கோட்டம், தர்மபுரியில் அதியமான் கோட்டம் என தமிழ் வளர்க்கும் கோட்டங்களை அமைத்தார். அதுபோல், முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் பொறுப்பேற்றது முதல் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புதிய முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை அமைத்து தமிழ்நாட்டை ஒரு தொழில் கோட்டமாக உருவாக்கும் முயற்சியில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்.

2030க்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்திய பொருளாதாரத்துக்கு மிக முக்கிய பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து முனைப்புடன் செயல்படுகிறது. முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் 1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

2ம் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 17,371 பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7,441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன. மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன்எப்போதும் இல்லாத அளவாக, 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின்மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான்காம் கட்டமாக 27-1-2024 அன்று புறப்பட்டு ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஆகியோரை சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும், கிடைக்கும் திறன்வாய்ந்த மனித வளத்தையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வருமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார்.

அதன் பயனாக ரூ.3,440 கோடி அளவிற்கு முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கிய பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டு பாராட்டியது. ‘ஆண்டுவாரி முதலீட்டாளர்கள் சந்திப்பு 2022 நடந்தபோது ஆசிய-ஒசியான மண்டலத்திற்கான சிறந்த முதலீட்டு நிறுவனத்திற்குரிய விருது தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

புதிய தொழில் முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்கள் செய்துள்ள நிலையில் தமிழ்நாட்டை பெரிய அளவில் தொழில்மயமாக்க அடுத்த 5 ஆண்டுகளில் 45,000 ஏக்கர் பரப்பளவில் நில வங்கி உருவாக்கப்படுகிறது. இதற்காக, சிப்காட் நிறுவனம் ஏறத்தாழ 33,489 ஏக்கர் நிலம் தெரிவு செய்துள்ளது. இதில், 22,941 ஏக்கர் நிலம் அரசின் நிர்வாக அனுமதி பெற்று கையகப்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றபின் இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படி தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்படுவதுடன், ஒப்பந்தங்கள் தொழில் நிறுவனங்களாக உருப்பெற தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்காக முதல்வர், தொழில் துறை அமைச்சர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழுவின் தொடர் நடவடிக்கைகளின் மூலம் பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து உருவாகும் வாய்ப்பு உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 33 மாத ஆட்சி காலத்தில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அதன்மூலம் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலம் ஒரு மாபெரும் தொழிற் புரட்சிக்கான அடித்தளம் என்பதை வெளிப்படுத்துகிறது.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றபின் இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

* 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 74,757 இளைஞர்கள், மகளிர்க்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் 33 மாத ஆட்சியில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகளுடன் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழகத்தில் மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Tamil Nadu ,Chennai ,M.K.Stalin. ,Tamil Nadu government ,Valluvar Kotam ,Athiyaman Kotam ,Dharmapuri ,M.K.Stalin ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...