×

சிவனை பூஜித்த விலங்குகள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

* காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் உள்ள திருப்புலிவனத்தில், “திருப்புலிவலமுடையார்’’ அருள்கிறார். சாபத்தால் புலியாக உருமாறிய முனிவர், இங்கே சிவபெருமானை பூஜித்திருக்கிறார்.

* நெல்லைக்கு அருகில் உள்ள சங்கரன்கோவிலில் அம்பிகை, பசுவடிவில் வந்து ஈசனை வணங்கினாள். ‘கோ’ எனும் பசுவாக தேவி வழிபட்டதால் இத்தல அன்னை “கோமதி’’ என்றே
வணங்கப்படுகிறாள்.

* திருச்சி, திருவெறும்பூரில் ஈசனை, எறும்புகள் வணங்கி, பிரசாதத்தை எடுத்துச் செல்லும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.

* ஈ, சிவனை பூஜித்து பேறு பெற்ற தலம் முசிறி. அருகே உள்ள திருஈங்கோய்மலை. யோகினிகளே (பெண் அர்ச்சகர்கள்) இங்கு பூஜை, ஹோமங்கள் போன்றவற்றை செய்கின்றனர்.

* பாம்பு, சிவபெருமானை பூஜித்த தலம் திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தல ஈசனை “ஆதிசேஷன்’’ என்ற பாம்பு வழிபட்டிருக்கிறது.

* அணில், குரங்கு, காகம் மூன்றும் சிவனை பூஜித்து நன்மையடைந்த தலம் திருக்குரங்கணில்முட்டம். சாபத்தால் காகமாக மாறிய எமனும், அணிலாக மாறிய தேவேந்திரனும், குரங்காக மாறிய வாலியும் இத்தலத்தில் சாபவிமோசனம் பெற்றனர். காஞ்சிபுரம், மாமண்டூர் தூசி எனும் இடத்தில் உள்ளது.

* சாபம் காரணமாக மயில் உருவில் வந்து அம்பிகை சிவபெருமானை பூஜை செய்த தலம் மயிலாடுதுறை.

* கழுகு, சிவபெருமானை பூஜை செய்து வளங்கள் பெற்ற தலம் திருக்கழுக்குன்றம். நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் இங்கு கழுகுகள் பூஜித்து வருகின்றன.

* சிலந்தி சிவனை பூஜித்து முக்தி பெற்ற தலம் திருக்காளத்தி.

* திருவாரூர், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர், வண்டு உருவில் ஈசனை பூஜித்தார். இன்றும் கருவறையில் வண்டின் ரீங்கார ஒலிகேட்கிறது.

* சாபத்தால் நண்டாக மாறிய தேவேந்திரன், ஈசனை வணங்கி பேறுபெற்றான். திருந்துதேவன்குடி எனும் இத்தலத்தை, நண்டாங்கோயில் என்றும் அழைப்பர். இது கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது.

* தஞ்சாவூர், அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள திருச்சக்கராப்பள்ளியில் அருளும் ஈசனை சக்ரவாகப் பறவை பூஜித்து பேறுபெற்றது.

* திருவாரூர், திருக்கொட்டாரத்தில் அருள்புரியும் ஈசனை, துர்வாசரால் சாபம் பெற்ற ஐராவத யானை பூஜித்து விமோசனம் பெற்றது.

* தஞ்சாவூர், பட்டீஸ்வரத்தில் காமதேனுவின் மகளான பட்டி எனும் பசு வழிபட்ட லிங்கம் உள்ளது.

* காஞ்சிபுரம், திருக்கச்சூரில் அருளும் ஈசனை திருமால் தரிசித்து, தேவாசுரர்கள் அமிர்தம் கடைந்தபோது மந்தார மலையைத்தான் கூர்மமாக (ஆமை) தாங்குவதற்கு சக்தி பெற்றிருக்கிறார். அதனால், இத்தல ஈசன் கச்சபேஸ்வரர் என வணங்கப்படுகிறார்.

* கிளியாக மாறிய சுகமுனிவர் பூஜை செய்த சுகவனேஸ்வரர், சேலத்தில் அருள்கிறார்.

* ஜடாயு வழிபட்ட தலம் வைத்தீஸ்வரன் கோயில்.

* தஞ்சாவூர், வடகுரங்காடுதுறையில் தன்னை பூஜித்த சிட்டுக் குருவிக்கு மோட்சப் பதவி அளித்த ஈசன், “சிட்டிலிங்கேஸ்வரராக’’ கோயில் கொண்டிருக்கிறார்.

தொகுப்பு: ஜெயசெல்வி

The post சிவனை பூஜித்த விலங்குகள் appeared first on Dinakaran.

Tags : Shiva ,Kunkum Anmikam ,Tirupulivanam ,Uthramerur Road, Kanchipuram ,Lord ,Sankaran temple ,Nellai ,Ambikai ,Isaan ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்