×

முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் பாஜவுக்கு கதவு சாத்தப்பட்டு விட்டது‌: அமித்ஷாவுக்கு ஜெயக்குமார் மூக்குடைப்பு

தஞ்சாவூரில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை தொடர்பாக கருத்து கேட்புக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: அமித்ஷா கூட்டணியின் கதவுகள் திறந்து இருக்கிறது என தனது கட்சியின் நிலைப்பாட்டை கூறியுள்ளார். எங்களுடைய முன்னோடிகளான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி சிறுமைப்படுத்தும் விதமாக ஒரு மாநிலத்தலைவர் கடுமையான விமர்சனம் செய்தார். அவருக்கு கண்டனங்கள் தெரிவித்த போதும் தொடர்ச்சியாக எங்களை சிறுமைப்படுத்திய தலைவரை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பாஜவை நாங்கள் கழட்டி விட்டதும், தமிழகம் முழுவதும் எங்கள் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். எந்தக்காலத்திலும் கூட்டணி இல்லை என தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்கள் நிலைப்பாட்டை பொருத்தவரை பாஜவுக்கு கதவு சாத்தப்பட்டு விட்டது‌. எப்போதும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

* ஓபிஎஸ் கூறியது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான்
ஜெயக்குமார் கூறுகையில், ‘ஓபிஎஸ் தற்போது விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவர் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஓபிஎஸ் பாஜவின் கொத்தடிமை. கூட்டத்தில் அவர் பேசுவதை கேட்க ஆளே இல்லை. கூலிக்கு ஆள் வைத்து அழைத்து வருகிறார்கள். ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என கூறியது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான். ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எழுச்சியுடன் இருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் சில தனிமனிதர்கள் சேர்ந்து ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றார். பிரளயமே ஏற்பட்டாலும் இரட்டை இலை சின்னத்தை முடக்க எந்தக் கொம்பனாலும் முடியாது’ என்றார்.

The post முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் பாஜவுக்கு கதவு சாத்தப்பட்டு விட்டது‌: அமித்ஷாவுக்கு ஜெயக்குமார் மூக்குடைப்பு appeared first on Dinakaran.

Tags : Bajau ,Jayakumar ,Amit Shah ,Thanjavur ,AIADMK ,minister ,
× RELATED சொல்லிட்டாங்க…