×

ஓட்டலுக்கு வரவழைத்து காதலனுடன் சேர்ந்து தகாத உறவு காதலனை தீர்த்து கட்டிய காதலி: விமானத்தில் தப்ப முயன்ற போது இருவரும் கைது

கவுகாத்தி: கள்ளக்காதலனை ஓட்டலுக்கு வரவழைத்து தனது காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய காதலியையும், அவரது காதலனையும் கொல்கத்தா விமான நிலையத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த கார் டீலர் சந்தீப் குமார் காம்ப்ளே (44) என்பவருக்கும், கொல்கத்தா விமான நிலையத்தில் அமைந்துள்ள ஓர் உணவகத்தில் பணியாற்றி வந்த அஞ்சலி ஷா (25) என்பவருக்கும் கடந்த ஓராண்டாக கள்ளக்காதல் இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு ஜாலியாக இருந்து வந்தனர்.

அதேநேரம் அஞ்சலி ஷா, பிகாஷ் குமார் ஷா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் அவ்வப்போது ஜாலியாக இருந்து வந்தனர். இந்த முக்கோண காதல் விவகாரம் பிகாஷ் குமார் ஷாவுக்கு தெரியவந்தது. அதையடுத்து அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அஞ்சலி ஷாவிடம் வலியுறுத்தினார். ஆனால் திருமணத்திற்கு சந்தீப் குமார் காம்ப்ளே தடையாக இருப்பதாக கூறினார்.

அதையடுத்து அஞ்சலி ஷாவும், பிகாஷ் குமார் ஷாவும், சந்தீப் குமார் காம்ப்ளேவை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். அதன்படி அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையம் அருகே உள்ள ஓர் ஓட்டலுக்கு சந்தீப் குமார் காம்ப்ளேவை அஞ்சலி ஷா வரச் சொன்னார். அதன்படி சந்தீப் குமார் காம்ப்ளேவும் கவுகாத்தி வந்தார். அவரை தனியாக சென்ற அஞ்சலி ஷா வரவேற்றார்.

இருவரும் அந்த ஓட்டலுக்கு சென்றனர். திடீரென அந்த ஓட்டலின் அறைக்கு சந்தீப் குமார் காம்ப்ளே வந்தார். அவர் அஞ்சலி ஷாவை அங்கிருந்து மீட்டு செல்ல முயன்றார். இதனால் சந்தீப் குமார் காம்ப்ளேவுக்கும், பிகாஷ் குமார் ஷாவுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சந்தீப் குமார் காம்ப்ளேயின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் ஓட்டல் அறையிலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் அஞ்சலி ஷாவும், பிகாஷ் குமார் ஷாவும் அங்கிருந்து தப்பினர். இவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அவர்கள் பதிவு செய்திருந்த ஓட்டல் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு சந்தீப் குமார் காம்ப்ளே கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சந்தீப் குமார் காம்ப்ளேயின் உடலை கைப்பற்றினர். இதற்கிடையே தனிப்படை போலீசார் தப்பியோடிய காதல் ஜோடியை தேடி வந்தனர். அவர்கள் கவுகாத்தியில் இருந்து கொல்கத்தா நோக்கி செல்வதாக தெரியவந்தது.

அதையடுத்து கொல்கத்தா விமான நிலையம் சென்ற போலீசார், காதல் ஜோடியான அஞ்சலி ஷா, பிகாஷ் குமார் ஷா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பிகாஷ் குமார் ஷா தாக்கியதில் சந்தீப் குமார் காம்ப்ளேயின் தலையில் அடிபட்டு மூக்கில் அதிகளவு ரத்தம் வெளியேறிய நிலையில் அவர் இறந்தார்.

ஓட்டலில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் விமான நிலைய பயணிகளின் பட்டியலில் அஞ்சலியும் பிகாஷ் ஆகியோரின் பெயர்கள் இருந்தன. அதனால் கொல்கத்தாவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அஞ்சலி ஷாவின் கள்ளக்காதல் உறவால், காதலனுடன் சேர்ந்து சந்தீப் குமார் காம்ப்ளேவை கொலை செய்தது உறுதியாகி உள்ளது’ என்றனர்.

The post ஓட்டலுக்கு வரவழைத்து காதலனுடன் சேர்ந்து தகாத உறவு காதலனை தீர்த்து கட்டிய காதலி: விமானத்தில் தப்ப முயன்ற போது இருவரும் கைது appeared first on Dinakaran.

Tags : Guwahati ,Kolkata airport ,Sandeep Kumar Kamble ,Pune, Maharashtra ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது...