×

மாநில நிதி பங்கீடு விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை கண்டித்து கர்நாடக முதல்வர் போராட்டம்: டெல்லியில் துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்பு

புதுடெல்லி: மாநில நிதி பங்கீடு விவகாரம் தொடர்பாக டெல்லியில் ஒன்றிய அரசை கண்டித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப் பட்ட ஒன்றிய இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாக, அம்மாநில காங்கிரஸ் அரசு குற்றம்சாட்டியது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி டி.கே.சுரேஷ் கூறுகையில், ‘வரி வருவாயை பங்கிட்டு வழங்குவதில் தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதேநிலை நீடித்தால் தென்மாநிலங்களுக்கு தனி நாடு கோரும் நிலை ஏற்படும்’ என்றார். இவரது பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் வரி வருவாய் உரிய முறையில், மாநிலங்களுக்கு முறையான நிதி பங்கீடு வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் அரசு சார்பில் டெல்லியில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார். அதன்படி இன்று ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், ‘ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு சமமான நிதிப்பங்கீட்டை வழங்கவில்லை. எங்களது போராட்டத்திற்கு ஒன்றிய அரசு செவிசாய்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கர்நாடகா மாநிலம் மற்றும் கன்னடர்களின் நலனை பாதுகாப்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும்’ என்றார். மேலும் இந்த போராட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு, ஒன்றிய நிதியை தவறாக பயன்படுத்தும் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக எம்பிக்கள் போட்டி போராட்டம் நடத்தினர்.

The post மாநில நிதி பங்கீடு விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை கண்டித்து கர்நாடக முதல்வர் போராட்டம்: டெல்லியில் துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,EU Government ,Delhi ,NEW DELHI ,KARNATAKA CHIEF ,CHITARAMAYA ,UNION GOVERNMENT ,EU Interim Budget ,Parliament ,Deputy ,Dinakaran ,
× RELATED விவசாயிகளின் விளைபொருளுக்கு நிலையான...