×

புதுப்பெண் தற்கொலை செய்த நிலையில் புதுமாப்பிள்ளையும் தூக்குப்போட்டு தற்கொலை

*திருமணமான 6 மாதத்தில் விபரீத முடிவு

*வாணியம்பாடி அருகே அடுத்தடுத்து சோகம்

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே குடும்ப தகராறில் புதுப்பெண் தற்கொலை செய்த நிலையில், சென்னையில் புதுமாப்பிள்ளையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(34). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தேன்மொழி(32). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மனவேதனை அடைந்த தேன்மொழி கடந்த 4ம் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தையும், வாணியம்பாடி அரசு மருத்துவமனையையும் முற்றுகையிட்டனர். அப்போது, தேன்மொழியின் தற்கொலைக்கு காரணமான கணவர் அருண்குமார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்டிஓ பிரேமலதா, தேன்மொழியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அருண்குமாரிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதையடுத்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் அருண்குமார் தங்கியிருந்த அறைக்கு நேற்று முன்தினம் காலை அவரது பெற்றோர் சென்று பார்த்தபோது, அவரை காணவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், அருண்குமாரை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையில், அருண்குமார் தான் தங்கியிருந்த அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது நேற்று முன்தினம் மாலை கே.கே.நகர் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 6 மாதங்களில் குடும்ப தகராறில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுப்பெண் தற்கொலை செய்த நிலையில் புதுமாப்பிள்ளையும் தூக்குப்போட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vaniyampadi ,Chennai ,Tirupathur District ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...