×

தாழக்குடி அருகே பைக் விபத்தில் பள்ளி மாணவன் பலி

*நண்பர்கள் 2 பேர் படுகாயம்

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி அருகே விபத்தில் 9ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவருடன் பைக்கில் சென்ற மற்ற 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
செண்பகராமன்புதூர் அவ்வையாரம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் செல்வசேகரன் . செண்பகராமன்புதூர் யோகீஸ்வரர் காலனியை சேர்ந்தவர் சுரேஷ் மகன் ஆகாஷ் . இருவரும் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்தவர் வினோத் மகன் அபிஜித் . இவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். செல்வசேகரன், ஆகாஷ், மற்றும் அபிஜித் ஆகிய 3 பேரும் நெருங்கிய நண்பர்கள்.

இந்தநிலையில் செல்வசேகரன் நேற்று முன்தினம் இரவு தனது நண்பருக்கு சொந்தமான பைக்கில் அபிஜித் மற்றும் ஆகாஷை ஏற்றிக்கொண்டு வெளியே புறப்பட்டார். இரவு சுமார் 8.30 மணியளவில் தாழக்குடி வழியாக வீரநாராயணமங்கலம் செல்லும் சாலையில் சென்றபோது திடீரென பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது. பைக்கில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் அபிஜித், ஆகாஷ் ஆகியோர் நடுரோட்டில் விழுந்து படுகாயமடைந்தனர்.

செல்வசேகரன் அருகே இருந்த வயல்வெளியில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் அபிஜித்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் ஆகாசுக்கு முகம், தாடை மற்றும் பின் தலையிலும், செல்வசேகரனுக்கு வலது கால் மற்றும் முட்டு பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. 3 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் சிலர் இதனைக்கண்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ், ஆரல்வாய்மொழி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். படுகாயமடைந்த 3 பேரும் ஆம்புலன்ஸில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அபிஜித் பரிதாபமாக இறந்து விட்டான். எனவே அபிஜித்தின் உடலை பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்வசேகரன், ஆகாஷ் ஆகியோர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதில் ஆகாஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் 3 பேரும் இரவு நேரத்தில் எதற்காக பைக்கில் சென்றார்கள்? அவர்கள் நிலைதடுமாறி விழுந்தார்களா? அல்லது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தாழக்குடி அருகே பைக் விபத்தில் பள்ளி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Thalakudi ,Aralwaimozhi ,Selvasekaran ,Awwayaramman ,Senpakaramanputur ,Senpakaramanputhur ,Yogeeswarar ,
× RELATED ஆரல்வாய்மொழி அருகே பைக் மீது மினிலாரி மோதியதில் குழந்தை உள்பட 3 பேர் காயம்