×

நள்ளிரவு காரில் கத்திகளுடன் சுற்றித்திரிந்த கொள்ளையர்கள் ஒருவர் கைது வேட்டவலம் அருகே போலீஸ் ரோந்து

வேட்டவலம், பிப்.7: வேட்டவலம் அருகே நள்ளிரவு கத்திகளுடன் சுற்றித்திரிந்த கொள்ளையர்களில் ஒருவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், தலைமை காவலர் தங்கராஜ் மற்றும் போலீசார் கடந்த 4ம் தேதி நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேட்டவலம் அருகே வெறையூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட வன்னிய நகரம் கூட்ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே 2 பேர் மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட காருடன் நின்றுகொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களிடம் விசாரிக்க சென்றனர்.

போலீசாரை கண்டதும் இருவரும் ஓட்டம் பிடித்தனர். உடனே போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். விசாரணையில் பிடிபட்ட நபர் கர்நாடக மாநிலம், பெங்களூரு ராம் நகர் மாகடி பகுதியைச் சேர்ந்த சூர்யா(21), என்பதும் தப்பிய ஓடியவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த ராகுல்(42) என்பதும் தெரிய வந்தது. காரை சோதனையிட்டதில் 2 கத்திகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டு சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 கத்தி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வெறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தார். மேலும் தப்பியோடிய ராகுலை போலீசார் தேடி வருகின்றனர்.

The post நள்ளிரவு காரில் கத்திகளுடன் சுற்றித்திரிந்த கொள்ளையர்கள் ஒருவர் கைது வேட்டவலம் அருகே போலீஸ் ரோந்து appeared first on Dinakaran.

Tags : Vettavalam ,Thiruvannamalai District ,Verayur Police ,Sub-Inspector ,Ganesan ,Head Constable ,Thangaraj ,Dinakaran ,
× RELATED வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை...