×

அமைந்தகரையில் பரபரப்பு மாநகர பேருந்து பலகை உடைந்து கீழே விழுந்த பெண் உயிர் தப்பினார்: பயணிகள் அதிர்ச்சி, வைரலாகும் வீடியோ

அண்ணா நகர்: அமைந்தகரையில், மாநகர பேருந்தின் பலகை உடைந்து கீழே விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடுக்கு மாநகரப் பேருந்து (தடம் எண் 59) நேற்று மதியம் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை, என்.எஸ்.கே.நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் கடைசி சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் பஸ் நிறுத்தத்தில் இறங்குவதற்காக எழுந்து நின்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பேருந்தின் அடிப்பலகை உடைந்ததில் அந்த பெண் ஓட்டை வழியாக அப்படியே காலை மடக்கிய நிலையில் கீழே விழுந்தார். அவர் சாதுர்யமாக அங்கிருந்த கம்பியை பிடித்து தொங்கியபடி, தரையில் கால் உரசியபடி சத்தம் போட்டார். இதை பார்த்து சக பயணிகள் கூச்சல் போட்டதையடுத்து டிரைவர் பேருந்தை நிறுத்தினார். சிறிது தூரம் தரையில் கால் தேய்த்தபடி அந்த பெண் தர, தரவென இழுத்து சென்ற நிலையில், பயணிகளும் பொதுமக்களும் பலகை உடைந்து விழுந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் அவருக்கு முதலுதவி அளித்து அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்து அந்த பெண் வீடு திரும்பினார். இந்த சம்பவத்தை பார்த்து, பயணிகளும், பொதுமக்களும் மாநகர பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டரை திட்டினார்கள். பணிமனையில் இருந்து பேருந்தை எடுக்கும் போது முறையாக கவனித்து எடுக்க மாட்டீர்களா, பராமரிப்பு பணி நடக்காதா என சரமாரியாக கேள்வி எழுப்பினர். இந்நிலையில், இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என கண்டக்டர் அலட்சியமாக பதில் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், டிரைவர் சாதுர்யமாக பேருந்து பழுதாகி விட்டதாக கூறி பயணிகளை மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு போலீசுக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் அங்கிருந்து பேருந்தை எடுத்துச் சென்றுவிட்டார். மேலும் மாநகர பேருந்தின் உள் பகுதியில் பலகை உடைந்து விழுந்து காயம் அடைந்த பெண் சென்னை மிண்ட் பகுதியைச் சேர்ந்த ஷானாஸ் (30) என்பதும், என்.எஸ்.கே.நகரில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. புகாரின்பேரில், அமைந்தகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* அதிகாரிகள் ஆய்வு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முடிச்சூரில் தனியார் பள்ளி பேருந்தில் வந்த மாணவி பஸ்சின் பலகை உடைந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தையடுத்து. அரசு சார்பில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி பேருந்துகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது மாநகர பேருந்தில் பயணம் செய்த பெண்ணே உள்பகுதியில் பலகை உடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பணிமனைகளில் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, சரியாக சர்வீஸ் செய்துவிட்டு மக்கள் சேவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறதா என போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post அமைந்தகரையில் பரபரப்பு மாநகர பேருந்து பலகை உடைந்து கீழே விழுந்த பெண் உயிர் தப்பினார்: பயணிகள் அதிர்ச்சி, வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Slatkakara ,Anna ,Nagar ,Nuktakara ,Chennai Vallalar ,Thiruvekkad ,Nitakara ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை