×

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்

சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் சென்னை வந்தனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள், கடந்த மாதம் 13ம் தேதி, இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 12 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர். பிறகு இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து 12 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்த பின், தமிழ்நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அனைவருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கி விமான டிக்கெட்களையும் ஏற்பாடு செய்தனர். பின்பு ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் நேற்று அதிகாலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து, நேற்று காலை சென்னை வந்த 12 மீனவர்களையும் தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர்களது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Sri Lanka ,Chennai ,Tamil Nadu ,Sri Lankan Navy ,Pudukottai district ,Nedundivu ,Indian sea border ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...