சென்னை: மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வந்தடைந்தனர். மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்கு துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், இந்திய தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் உள்ளிட்ட அதிகாரிகள் சென்னை வருகை தந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆணைய அதிகாரிகள் 2 நாள் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மதியம் 2:30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத்துறை, சுங்கத்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.
பின்னர், நாளை (பிப்.7) காலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் வருகையை முன்னிட்டு தமிழ்நாட்டு காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
The post மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த சென்னை வந்தது இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு..!! appeared first on Dinakaran.