×

பாலக்கோடு அருகே பரபரப்பு ஓடும் கார் தீப்பிடித்து எரிந்து தொழிலதிபர் கருகி பலி

*கொலையா? என போலீசார் விசாரணை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்ததில் தொழிலதிபர் உடல் கருகி பலியானார். தொழில் போட்டியில் கொலை செய்து, காரில் உடலை வைத்து தீ வைத்து சென்றனரா என்ற கோணத்தில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முரளி மகன் சஞ்சீவ்(32). இவர் சொந்தமாக மொபைல்ஸ் ஷாப், மெடிக்கல் ஷாப் கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை, சொந்த வேலை விஷயமாக ராயக்கோட்டையில் இருந்து, தர்மபுரிக்கு காரில் வந்துள்ளார். ஓசூர்- தர்மபுரி புதிய நெடுஞ்சாலையில் வந்த போது, பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கசியம்பட்டி பகுதியில், மாலை 6 மணியளவில் காரின் முன்பகுதியில் திடீரென புகை வந்தது. சஞ்சீவ் காரில் இருந்து இறங்குவதற்குள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்து வெளியே வர முடியாமல் சஞ்சீவ் தவித்தார். சிறிது நேரத்தில் கார் மளமளவென தீ பிடித்து எரிந்தது. இதில் சஞ்சீவ் உடலில் தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில், பாலக்கோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் சஞ்சீவ் உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில், பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் இறந்த சஞ்சீவிற்கு நிவேதா என்ற மனைவி உள்ளார்.

உண்மையிலேயே காரில் தீ பிடித்து அவர் இறந்தாரா?, அல்லது தொழில் போட்டியில் முன்விரோதத்தில் யாரேனும் அவரை கொலை செய்து, காரில் வைத்து தீ வைத்து விட்டுச் சென்றனரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இது தொடர்பாக, பாலக்கோடு டிஎஸ்பி சிந்து தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலசுந்தர் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாலக்கோடு அருகே பரபரப்பு ஓடும் கார் தீப்பிடித்து எரிந்து தொழிலதிபர் கருகி பலி appeared first on Dinakaran.

Tags : Palakode ,Dharmapuri ,Dharmapuri District, Dharmapuri district ,Palakod ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே...