×

அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் திருப்பம் அதிக சீட், அதிக பணம் கேட்கும் கட்சிகள்: திணறும் எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக கூட்டணியில் சேருவதற்கு அதிக சீட், மாநிலங்களவை எம்பி, அதிக பணம் கேட்டு கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையை வெளிப்படையாக தொடங்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறி வருகிறார். அதிமுக, பாஜ கூட்டணி அடைந்த பிறகு அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் யாருடனும் சேராமல் உள்ளனர். பாஜ மற்றும் அதிமுக முன்னணி தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனி்சாமியின் உத்தரவுக்கிணங்க பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை அதிமுக ஓரளவு நடத்தியுள்ளது. பாமக 8 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி மற்றும் தேர்தல் செலவுக்கு பணம் கேட்டுள்ளது. தேமுதிக 4 எம்.பி. தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி, பணம் கேட்டுள்ளனர். புதிய தமிழகம் 5 மக்களவை தொகுதி, தேர்தலுக்கு நிதி கேட்டுள்ளனர். இதனால் அதிமுக விழி பிதுங்கியுள்ளது. இச்சூழ்நிலையில் கூட்டணி கட்சிகளின் தயவு அதிமுகவுக்கு அதிகமாக தேவைப்படும். அதனால் எப்படியும் நம்மிடம்தான் வருவார்கள் என்று இவர்கள் கணக்குப்போட்டு மாநிலங்களவை எம்பி தொகுதி கேட்டு பிடிவாதம் பிடிக்கின்றனர்.

பாஜ சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் டெல்லியைச் சேர்ந்தவர்களிடம் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோர் தலா ஒரு தொகுதி போதும் என்று சம்மதித்துள்ளனர். ஜாண்பாண்டியனும் ஒரு தொகுதி போதும் என்று கூறுகிறார். ஆனால் பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் மாநிலங்களவை எம்பி சீட், ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பாஜவும் தவித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு சீட் கூட யாருடனும் நின்றாலும் ஜெயிக்க முடியாது. இதனால் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு வேறு மாநிலத்தில் மாநிலங்களவை சீட் மற்றும் ஒன்றிய அமைச்சர் பதவிக்கு சம்மதித்தால், நமக்கு இழப்புதான். அவர்கள் பேசாமல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வைக்கட்டும். இல்லாவிட்டால் நம்முடன் பின்னர் கூட்டணி வைக்கலாம் என்று பாஜ தலைவர்கள் கூறி வருகின்றனர். வாசனோ, இரு அணியிடமும் பேசி வருகிறார். மக்களவை தேர்தலில் பாஜகவுடனும், சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுகவுடனும் கூட்டணிக்குத் தயார் என்கிறார். இதற்கு பாஜக சம்மதித்தாலும், அதிமுக தலைமையோ இப்போது வந்தால் கூட்டணி. இல்லாவிட்டால் எப்போதும் கூட்டணி இல்லை என்று கண்டிப்புடன் கூறிவிட்டனர். கூட்டணிக் கட்சிகளின் நிபந்தனையால் அதிமுக, பாஜவால் கூட்டணி பேச்சுவார்த்தையை வெளிப்படையாக தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

The post அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் திருப்பம் அதிக சீட், அதிக பணம் கேட்கும் கட்சிகள்: திணறும் எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi Palaniswami ,CHENNAI ,Rajya Sabha ,MPs ,AIADMK alliance ,BJP alliance ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...