×

செங்கல்பட்டு அருகே மதுபோதையில் கல்லூரி மாணவர்கள் மோதல்: ஆந்திர மாணவர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஒரு தனியார் கல்லூரி மாணவர்களிடையே மதுபோதை தகராறில் அடிதடி மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கல்லூரி மாணவரை சரமாரி தாக்கிய மற்றொரு ஆந்திர மாநில மாணவரை நேற்று போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு அருகே ஆத்தூரில் இயங்கி வரும் ஒரு தனியார் கல்லூரியில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்து, கேட்டரிங் டெக்னாலஜி படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் விடுதியில் தங்கியிருந்த சில மாணவர்கள் மது அருந்தியுள்ளனர். பின்னர் மதுபோதையில் கல்லூரி மாணவர்களிடையே ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் முற்றியதில் சரமாரி அடிதடி மோதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இத்தாக்குதலில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் முஸ்தபா (19) என்பவர் படுகாயம் அடைந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின்பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, எஸ்ஐ ரஞ்சித்குமார் தலைமையில் போலீசார், முஸ்தபாவை தாக்கிய மாணவரை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், மதுபோதையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட அடிதடி மோதலில் மாணவர் முஸ்தபாவை தாக்கிய மற்றொரு கல்லூரி மாணவரை நேற்று மாலை செங்கல்பட்டு அருகே பழத்தோட்டம் பகுதியில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சீனுவாசராவ் (23) என்பதும், இவர் அதே கல்லூரியில் 3ம் ஆண்டு கேட்டரிங் டெக்னாலஜி படித்து வருவதும் தெரியவந்தது.

அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இக்கல்லூரி மாணவர்களிடையே மது, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அதுதொடர்பாக பணம் கொடுக்கல், வாங்கலில் அடிக்கடி அடிதடி மோதல் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

The post செங்கல்பட்டு அருகே மதுபோதையில் கல்லூரி மாணவர்கள் மோதல்: ஆந்திர மாணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Andhra ,Attur ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!