×

நகை பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

*கோவை எஸ்பி உத்தரவு

கோவை : நகை பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுவை சஸ்பெண்ட் செய்து கோவை எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார்.பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி (58). கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் மொபட்டில் சென்றபோது அவரிடம் பைக்கில் வந்த நபர் நகை பறித்தார். கோலார்பட்டியை சேர்ந்த அம்சவேணி (32) என்பவரிடமும் பிஏபி அலுவலகம் அருகே நகை பறிக்கப்பட்டது.

இது தொடர்பாக பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த நபரை தேடினர். அவர் கருப்பு நிற நெம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்ததும், கையில் காப்பு அணிந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெண்களிடம் நகை பறித்தது பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த சபரிகிரி (41) என்பது தெரியவந்தது. இவர் செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் ஹெல்மெட் அணிந்து நகை பறிப்பில் ஈடுபட்டதும், செட்டிபாளையத்தில் நடந்த பல்வேறு நகை பறிப்பில் இவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்து ஏழரை பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இவரது மனைவி வால்பாறையில் போலீசாக பணியாற்றி வருகிறார். சபரிகிரி நகை பறிக்க உதவியாக இருந்த நபர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். நகை பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு சபரிகிரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் நேற்று உத்தரவிட்டார்.

The post நகை பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Coimbatore SP ,Coimbatore ,Maheshwari ,Pollachi Makinambatti ,
× RELATED வீடு தீப்பிடித்து பொருட்கள் நாசம்