×

புதுச்சேரியில் இருந்து பைக்கில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

 

நாகப்பட்டினம்,பிப்.5: நாகூர் வாஞ்சூர் சோதனைச் சாவடியில் நாகூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து சாராய வாடை அடித்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இந்த இரண்டு சக்கர வாகனத்தை விரட்டி சென்று நாகூர் வெட்டாறு பாலம் அருகே நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் சாராய பாக்கெட்டுகள் எதிலும் இல்லை. இருப்பினும் சந்தேகம் அடைந்த போலீசார் இரண்டு சக்கர வாகனத்தின் பின்புறம் அமரும் சீட்டை திறந்து பார்த்தனர். அதில் குளிர்பான காலி பாட்டில் இருந்து டியூப் மூலம் பெட்ரோல் எஞ்ஜின் பகுதிக்கு செல்வதை பார்த்து போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

தொடர்ந்து பெட்ரோல் டேங்க் திறந்து பார்த்த போது அதில் புதுச்சேரி மாநில கள்ளசாராயத்தை டேங்க் முழுவதும் நிரப்பி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பெரும்கடம்பனூரை சேர்ந்த வீரபாண்டி(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கள்ள சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய இரண்டு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

The post புதுச்சேரியில் இருந்து பைக்கில் சாராயம் கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Nagapattinam ,Nagor Police ,Inspector ,Satish Kumar ,Vanjoor ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு